தமிழ் சினிமா

என்கவுன்ட்டர் தீர்வல்ல; 'விசாரணை' படத்தை மறக்க வேண்டாம்: 'மான்ஸ்டர்' இயக்குநர் காட்டம்

செய்திப்பிரிவு

என்கவுன்ட்டர் தீர்வல்ல; 'விசாரணை' படத்தை மறக்க வேண்டாம் என்று 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

இன்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதனைக் கடுமையாகச் சாடியுள்ளார் 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "என்கவுன்ட்டர் தீர்வல்ல! கொண்டாடப்பட வேண்டியதும் அல்ல ! தமிழ் - தெலுங்கு சினிமா பிரபலங்கள் அதைக் கொண்டாடுவது கவலையைத் தருகிறது. வேதனை புரிகிறது, ஆனால் போலீஸின் தோட்டாக்களுக்கு அந்த உரிமையைத் தராதீர்கள். இது எதிர்வினை, நீதியும் அல்ல தீர்வும் அல்ல. வெற்றிமாறனின் 'விசாரணை' படத்தை மறந்து விடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

SCROLL FOR NEXT