தமிழ் சினிமா

திரை விமர்சனம் - அழியாத கோலங்கள் 2

செய்திப்பிரிவு

தேசிய அளவில் புகழ்பெற்றவர் தமிழ் எழுத்தாளர் கவுரிசங்கர் (பிரகாஷ் ராஜ்). கணவனை இழந்து தனியாக வாழும் தனது கல்லூரித் தோழியான மோகனாவை (அர்ச்சனா) சந்திக்க, 24 ஆண்டு களுக்குப் பிறகு அவரது வீட்டுக்கு வருகிறார். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக கவுரிசங்கர் இறந்துவிட, மோகனாவின் நிலை என்ன ஆனது.. சமூகம், காவல் துறை, எழுத்தாளரின் மனைவி ஆகியோர் இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி பார்த்தார்கள்.. மோகனா மீதான இவர்களது அணுகு முறை என்னவாக இருந்தது என்பது மீதிக் கதை.

சிறுகதைத் தன்மை கொண்ட இந்த கதையை, திரைக்கதை ஆக்குவதில் இருக்கும் சவாலை, சமரசம் இல்லா மல் கடந்து வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி.

24 மணிநேரத்தில் நடந்து முடியும் கதையில், முதன்மைக் கதாபாத்திரங் களான கவுரிசங்கரும், மோகனாவும் 24 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய நினைவுகளை, உரையாடல் வழியாக மீட்டுக்கொண்டு வருகிறார்கள். வசனங்கள் உயிர்ப்பும், உணர்வும் குறையாமல் இருந்தால் தவிர, இயக்கு நர் தோற்றுப்போய்விடும் ஆபத்தான இடம் இது. மிகச் சவாலான இந்த பகுதியை, பிளாஷ்பேக் காட்சிகளை நாடாமல், உரையாடல் வழியாகவே கொண்டுவந்து, காலத்தையும், கதா பாத்திரங்களின் பாசி படியாத நினைவு களையும் பார்வையாளர்களின் மனத் திரையில் வெற்றிகரமாக நிழலாட விட்டிருக்கிறார் இயக்குநர்.

ஓர் எழுத்தாளன் பிறந்த தருணமும், அதற்கு அவன் செலுத்தும் காணிக் கையும் திரைக்கதையில் உள்ளிடப் பட்ட விதம் மிக நேர்த்தியானது. இந்த அபூர்வமான அம்சத்துக்காகவே படத்தை ரசிக்கலாம்.

எழுத்தாளரின் மரணத்துக்குப் பிறகான தருணங்கள், நாகரிக சமூகம் என எண்ணிக்கொள்ளும் மாறாத பொதுப்புத்தியின் முகமூடியைப் பிரித்துக் காட்டுகின்றன. ஒரு பெண் வயதானவரே என்றாலும், ஓர் ஆணோடு தனித்திருக்க நேர்ந்தால், எத்தனை கோணலான பார்வைகளால் கிழித்தெறியப்படுவாள் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறது படம். படத்தின் இறுதிக் கட்டம் பெண்களின் உணர்வுகளை மேலும் கூர்மையாக நோக்கியிருக்கிறது.

சிறந்த வாசகரான பிரகாஷ் ராஜ், எழுத்தாளர் கதாபாத்திரத்தில் கச்சித மாக பொருந்திவிடுகிறார். படத் தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளில் அர்ச்சனாவின் நடிப்பு மிகையாகத் துருத்தி நின்றாலும், தோழி கதாபாத்திரத்துக்கு அவரும் சிறந்த தேர்வுதான்.

இரண்டே காட்சிகளில் வரும் ரேவதியின் இருப்பு, படத்தை இன்னும் அர்த்தம் உள்ளதாக்கிவிடுகிறது. காவல் அதிகாரியாக வரும் நாசரின் விசாரணையும், அவர் கேட்கும் கேள்விகளும் அவரது கதாபாத்திரம் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது.

தடம் மாறாத கதைக்கு ஒளிப் பதிவு செய்துள்ள ராஜேஷ்.கே, வைர முத்துவின் உணர்வூக்கம் மிகுந்த வரிகளுக்கு சிறந்த இசையைத் தந்திருக்கும் அரவிந்த் சித்தார்த் ஆகிய இருவருமே படத்துக்கு நயம் கூட்டியிருக்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அவரது படைப்பாளுமைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த தலைப்பை பயன்படுத்தி, கச்சிதமான கால அளவில் படத்தைக் கொடுத் திருக்கும் இயக்குநர், உண்மையா கவே அவருக்கு மரியாதை செய்திருக் கிறார்!

SCROLL FOR NEXT