தமிழ் சினிமா

கடந்த 45 ஆண்டுகளாக பணியாற்றிய பிரசாத் ஸ்டுடியோ இசைக்கூடத்தை காலி செய்ய இளையராஜாவுக்கு போதிய அவகாசம் தேவை: பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் கோரிக்கை

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் இளையராஜா 45 ஆண்டுகளாக இசையமைத்து வந்த இசைக்கூடத்தை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் போதுமான அவகாசம் தர வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக தனது படங்களுக் கான இசைப் பணிகளை சென்னை சாலிக்கிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது இசைப் பணிகளுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையூறாக இருப் பதாக இளையராஜா தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இளையராஜா கடந்த 2 மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லாமல் இருந்தார்.

இந்நிலையில், இயக்குநர்கள் பாரதி ராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வ மணி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேற்று கூட்டாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று, இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர் களிடம் பாரதிராஜா கூறியதாவது:

இசையமைப்பாளர் இளையராஜா வுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் இங்கு வந்திருக்கிறது. அவர் ஓர் அற்புத மான கலைஞன். கடந்த 45 ஆண்டுகளாக ஒரே இடத்தில் அமர்ந்து தனது இசைப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

காலச்சூழல் காரணமாக, அந்த இடத்தை காலி செய்யுங்கள் என நிர்வாகம் கூறுகிறது. ஒருவர் 10 ஆண்டு கள் ஒரே இடத்தில் இருந்தாலே, அந்த இடம் சென்டிமென்டாக பிடித்துப் போய்விடும். அந்த வருத்தம் அவருக்கு இருக்கலாம். பிரசாத் ஸ்டுடியோ நிர்வாக மும் பெரிய நிறுவனம். அதனால்தான் இரு தரப்புக்கும் சாதக, பாதகம் இல்லாமல் பேச திரையுலகினர் கூடி பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளோம். இளைய ராஜா இந்த இடத்தை காலி செய்ய போதுமான அவகாசம் தேவை. அதுவரை இந்த இடத்தில் பணியாற்ற அவரை அனுமதியுங்கள் என்று கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம்.

யாருக்கும் பாதகம் வேண்டாம்

தற்போது எடுக்கும் முடிவால் இளைய ராஜா, பிரசாத் ஸ்டுடியோ, ஒட்டுமொத்த திரையுலகம் என யாருக்கும் பாதகம் இருக்கக்கூடாது.

இது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தின ருக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் இருந்து இளையராஜா நாளை வெளியே வரவேண்டிய சூழல் இருந்தால், இன்னொரு இடத்தை அவரே அமைத்துக் கொள்ளலாம். அல்லது, திரையுலகினராக நாங்கள் அவருக்கு ஓர் இடம் அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு.

இளையராஜா இங்கு இருந்து பணியாற்றி, வாழ்ந்த உரிமை இருப்ப தால்தான் இரண்டு பேருக்கும் இந்த இடத் தில் உரிமை உண்டு என்று கூறியுள்ளோம்.

பிரசாத் ஸ்டுடியோவை நிர்வகிக்கும் முக்கிய மேலாளர் ஊரில் இல்லை. எனவே தற்போதுள்ள நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அவர் வந்ததும் மீண்டும் ஒருமுறை எல்லோரும் கூடி பேசுவோம். விரைவில், அதாவது ஓரிரு நாளில்கூட அடுத்த பேச்சுவார்த்தை இருக்கும். அப்போது நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும். நல்ல முடிவு எடுப்பதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

முன்னதாக, பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட திரையுலகினர் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது அங்கு இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்திய பிறகு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT