பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம் பொங்கல் விடுமுறை நாட்களுக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'தபங் 3' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. இதனிடையே சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'ராதே' படத்தை இயக்கி வருகிறார். இவ்விரண்டு படங்களுக்கு முன்பு தமிழில் அவர் நாயகனாக நடித்து வந்தார். அதில் 'பொன் மாணிக்கவேல்' படமும் ஒன்று.
ஏ.சி.முகில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் காவல்துறை உதவி ஆணையராக நடித்துள்ளார் பிரபுதேவா. தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டனர். ஆனால், சரியான வெளியீட்டுத் தேதி கிடைக்காததால் காத்திருந்தது படக்குழு.
தற்போது 2020-ம் ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களுக்கு 'பொன் மாணிக்கவேல்' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஜினி நடித்துள்ள 'தர்பார்', மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சுமோ' ஆகிய படங்கள் தங்களுடைய பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளனர். அதோடு 'பொன் மாணிக்கவேல்' படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.