ஜெயலலிதா வாழ்க்கை வரலாறான 'தி அயர்ன் லேடி' தாமதம் ஏன் என்று இயக்குநர் பிரியதர்ஷினி விளக்கமளித்துள்ளார்.
அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் பலரும் படமாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதில் விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் 'தலைவி' என்ற படம் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புக்காக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆனால், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை முதல் நபராகப் படப்பூஜை போட்டு அறிவித்தவர் இயக்குநர் பிரியதர்ஷினி. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 'தி அயர்ன் லேடி' என்று தலைப்பிடப்பட்டது. மேலும், பிப்ரவரி 24, 2020 வெளியீடு என்று அறிவித்தார்கள்.
ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இதனால், இந்தப் படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. தற்போது, 'தி அயர்ன் லேடி' படத்தின் பணிகள் தொடர்பாக அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியதர்ஷினி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
'தி அயர்ன் லேடி' திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களைக் கவனமாகப் பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனனை ஜெயலலிதா அவர்களுடைய கதாபாத்திரத்திற்கான சரியான நடிகராகத் தேர்வு செய்தேன். ஜெயலலிதா அவர்களைப் போல முக அமைப்பு முதல் நிகரில்லா ஆளுமைத் திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அவரது பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். ஜெயலலிதா அவர்கள் தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர். சிறு வயது முதலே பரதநாட்டியம் மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பொதுவாக, அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையிலிருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன். இந்தக் களத்தில் ஒரு இயக்குநருக்கு முன் வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பைக் கொடுக்க கடமைப்பட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் காந்தி வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் மிகச் சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது. இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்தக் களத்தில் 50% வெற்றி, சரியான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும், உண்மை நிலையிலிருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம். படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும், அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமும் இருக்கும்.
சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம். உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும்.
இவ்வாறு பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.