தமிழ் சினிமா

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் ஜீத்து ஜோசப் - கார்த்தி படம்

செய்திப்பிரிவு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தாமதத்தால் மட்டுமே தீபாவளிக்கு வெளியானது. அதற்கு முன்பாகவே வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படம் 'கைதி' என்பது நினைவு கூரத்தக்கது.

'கைதி' முடித்துவிட்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான படத்தையும் ஒரே ஷெட்டியூலில் முடித்துவிட்டார் கார்த்தி. இதன் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். முழுக்க ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களிலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர். த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஜீத்து ஜோசப்.

'கைதி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ஜீத்து ஜோசப் - கார்த்தி படத்தைக் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர். இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT