தமிழ் சினிமா

‘1945’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ராணா Vs தயாரிப்பாளர் ராஜராஜன் மோதலால் தொடங்கியது சர்ச்சை

செய்திப்பிரிவு

‘1945’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பாக படத்தின் நாயகன் ராணாவுக்கும், தயாரிப்பாளர் ராஜராஜனுக்கும் கருத்து மோதல் உருவாகி, சர்ச்சையாகியுள்ளது.

சத்ய சிவா இயக்கத்தில் ராணா, ரெஜினா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மடை திறந்து'. தெலுங்கில் இந்தப் படத்துக்கு '1945' என்று பெயரிட்டனர். யுவன் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம், நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கே.ராஜராஜன் தயாரித்து வருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு '1945' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். பலரும் இந்த விளம்பரத்தைப் பகிரவே, நடிகர் ராணா தனது ட்விட்டர் பதிவில், "பண விஷயத்திலும், படத்தை முடிப்பதிலும் தவறிய ஒரு தயாரிப்பாளரின் முடிக்கப்படாத படம் இது. ஒரு வருடத்துக்கும் மேலாக அவர்களைச் சந்திக்கவில்லை. இன்னும் அதிக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக அவரது யோசனை இது. தயவுசெய்து இதை ஊக்குவிக்க வேண்டாம். நன்றி" என்று தெரிவித்தார் ராணா.

ராணாவின் இந்தப் பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், படத்தின் தயாரிப்பாளரைக் கடுமையாகத் தன் பதிவில் விமர்சித்திருப்பதால், பலருமே இதைப் பகிரத் தொடங்கினர். ராணாவின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் ராஜராஜன், "ஒரு படம் நிறைவு பெற்றதா, இல்லையா என்று அந்தப் படத்தின் இயக்குநர்தான் முடிவு செய்யவேண்டும்.

இந்தப் படம் நிறைவு பெற்றதா, இல்லையா என ரசிகர்கள் முடிவு செய்யட்டும். கிட்டத்தட்ட 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்து, கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, நிறைவு பெறாத ஒரு படத்தை யாரும் வெளியிட மாட்டார்கள். இயக்குநர்தான் ஒரு படத்தின் கதையை முடிவு செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் சத்ய சிவா தனது ட்விட்டர் பதிவில், "மூன்று ஆண்டுகள் கழித்து என் படத்தின் பணிகள் முடிவடைந்து, இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவப்படை வீரனின் காதல் மற்றும் தேசபக்திக்கு இடையே நடக்கும் உணர்ச்சிப் போர்தான் ’1945’ " என்று தெரிவித்துள்ளார்.

ராணா - தயாரிப்பாளர் ராஜராஜன் மோதல் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் எதையும் தெரிவிக்கவில்லை இயக்குநர் சத்ய சிவா.

SCROLL FOR NEXT