ஆழ்துளைக் கிணறுகளுக்கு இன்னும் எத்தனைக் குழந்தைகள் இரையாகப் போகிறார்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் ஜெயம் ரவி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 60 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்பப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோரும் நேரடியாகக் களத்திலிருந்து பணிகளைக் கவனித்து வருகின்றனர்.
சுஜித் விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில், "நம் நாட்டில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு இன்னும் எத்தனைக் குழந்தைகள் இரையாகப் போகிறார்கள்? இந்த தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படக் கூடாது. சுஜித் உறுதியுடனும் உடல்நலத்துடனும் மீண்டுவர என் பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார்.