சென்னை
இளம்பெண் சுவாதியின் கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘நுங்கம்பாக்கம்’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஜூன் 24-ம் தேதியன்று இளம்பெண் சுவாதியை கொலை செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம் குமாரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் அதே ஆண்டு செப்.18 அன்று மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் அறிவித்தனர்.
இந்நிலையில், சுவாதியின் கொலை வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘நுங்கம்பாக் கம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், முதலில் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் இந்த படத்தை எடுத்தனர். ஆனால் அதன்பிறகு இப்படத்தின் பெயரை ‘நுங்கம்பாக்கம்’ என மாற்றியுள்ளனர்.
தடை விதிக்க வேண்டும்
எனது மகன் ராம்குமாருக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. என் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக நாங்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் இப்படம் வெளியானால் எனது மகன் மற்றும் குடும்பத்துக்கு கெட்டபெயர் ஏற்படும். எனவே ‘நுங்கம்பாக்கம்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.