கமல்ஹாசனின் ’மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படம் குறித்து நடிகை வித்யா பாலன் சிலாகித்துப் பேசியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் வித்யாபாலன். தேசிய விருது வென்றவர். வித்யா பாலனின் பெற்றோர் தமிழர்கள். அம்மா, மலையாளமும் பேசக்கூடியவர். வீட்டில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகள் பேசித்தான் வித்யா பாலன் வளர்ந்தார். இருந்தாலும் இந்தியில் நடிக்க ஆரம்பித்த 15 வருடங்களுக்குப் பின் தான் வித்யா பாலன் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வித்யா பாலன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’மைக்கேல் மதன காமராஜன்’ பற்றிப் பகிர்ந்துள்ளார். "எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றான ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தை என் கணவர் சித்தார்த்துடன் மீண்டும் பார்த்தேன். தனித்தன்மையான கமல்ஹாசன் மற்றும் எனக்கு என்றும் பிடித்த நடிகைகளில் ஒருவரான ஊர்வசி. #திருப்பூ" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
’மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படம் அதன் நகைச்சுவைக்குப் பிரபலமானது. கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு மறைந்த எழுத்தாளர் கிரேசி மோகன் வசனம் எழுத, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். இதில் குறிப்பாக காமேஷ் என்ற பாலக்காடு தமிழர் கதாபாத்திரம், மலையாளம் பேசுபவர்களிடையே பிரபலம்.