பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் நாயகனாக ரியோவும், நாயகியாக ரம்யா நம்பீசனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'பாணா காத்தாடி' மற்றும் 'செம போத ஆகாதே' ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் தனது அடுத்த படத்துக்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்க யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கிய முந்தைய 2 படங்களுக்குமே யுவன்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்கவுள்ள படத்துக்கான நாயகன் - நாயகி தேர்வில் ஈடுபட்டு வந்தது படக்குழு.
இறுதியில் நாயகனாக ரியோவும், நாயகியாக ரம்யா நம்பீசனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பால சரவணன், ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது முழுக்க பயணப் பின்னணியில் நடைபெறும் கதை.
சென்னை, கொடைக்கானல், கேரளா, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளது.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துக்குப் பிறகு ரியோ நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் இது என்பது நினைவுகூரத்தக்கது.