தமிழ் சினிமா

தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் விஜய்: வைரலாகும் இயக்குநர் சாமியின் சர்ச்சைப் பேச்சு

செய்திப்பிரிவு

தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் விஜய் என்று இயக்குநர் சாமி பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் 'மிருகம்', 'உயிர்’, 'சிந்து சமவெளி' உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இறுதியாக 2015-ம் ஆண்டு 'கங்காரு' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தனது அடுத்தப் படத்துக்கான பணிகளைக் கவனித்து வருகிறார் இயக்குநர் சாமி.

இதனிடையே இவர் விஜய் குறித்து பேசிய வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், "வணக்கம் விஜய் சார். முன்னாள் இளைய தளபதி விஜய் சார் எப்படி இருக்கீங்க. என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியாது. ஏனென்றால் 4 முறை மட்டுமே சந்தித்துள்ளோம். 3 முறை உங்கள் வீட்டில். உங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சாருடைய 'தோஸ்த்' படத்துக்கு நான் வசனம் எழுதினேன். அந்தச் சமயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில் உங்களை 3 முறைச் சந்தித்துள்ளேன்.

அதற்குப் பிறகு ஒரே ஒருமுறை 2 மணி நேரம் 'அன்றில் பறவைகள்' என்ற கதையைச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் 2000-ம் ஆண்டு நடந்தது. நான்தான் 'மிருகம்’, 'உயிர்', 'சிந்து சமவெளி', 'கங்காரு' போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமி. உங்களிடம் 'அன்றில் பறவைகள்' என்ற குடும்பக் கதையைச் சொல்ல வந்தேன். அதை நீங்கள் 'ப்ரியமானவளே' படத்தின் ஷூட்டிங்கில்தான் கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். பிரச்சினையில்லை.

ரஜினி சார் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்கள். வாயைத் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். ஏனென்றால் நீங்கள் பேசுவதால் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள். 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, யாரை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும் என பேசினீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களை எங்கு வைத்துள்ளாரோ, அங்குதான் வைத்துள்ளார். நீங்கள் தேவையில்லாமல் வாயைத் திறந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் மாட்டிக் கொள்கிறீர்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

சினிமாவில் அல்ல நிஜ வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பது தெரியும். ரசிகர்களுடன் வாரந்தோறும் போட்டோ எடுத்துக்கொண்டு, என் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வங்கள் எனப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களுடன் கை கொடுத்துவிட்டு, போட்டோ எடுத்துவிட்டு உள்ளே போய் டெட்டால் போட்டு கை கழுவியதை நானே பார்த்தேன். இது தான் உங்களுடைய உண்மையான நடிப்பு.

நீங்கள் எதன் அடிப்படையில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஏனென்றால் 60 நாட்கள் நடித்துவிட்டு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள். அடுத்த படம் நடிக்கும்போது சம்பளத்தைக் கறுப்புப் பணமாக வாங்கி, வீட்டுக்குப் பின்பக்கமாக வரச்சொல்லி ஒரு இடத்தை வாங்கிக் கொடுத்துவிடுகிறீர்கள். இதில் எங்கு உங்களிடம் நேர்மை, உண்மை இருக்கிறது. நீங்கள் ஏன் மேடையில் பொய்யாகக் கருத்துச் சொல்லி வருகிறீர்கள். உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எஸ்.ஏ.சி வேறு, அனைவரும் சொன்னதைத் தான் விஜய்யும் சொல்லியிருக்கார் என்கிறார்.

ஏன் இவ்வளவு பொய், ஏமாற்று வேலை. எவ்வளவு நாள் தமிழ்நாட்டை இது போல் ஏமாற்ற முடியும். தயவுசெய்து படத்தில் நடிப்பதுடன் விட்டு விடுங்கள். மேடையில் பேசுவது, கருத்துச் சொல்வதை விட்டுவிடுங்கள். உங்களை விட பெரிய ஆட்கள் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நடித்துவிட்டுப் போங்கள். விஜய் சார், சும்மா வாய் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள். ஒரு நாள் சாயம் வெளுக்கத்தான் செய்யும். நீங்கள் நடித்துக்கொண்டே இருக்கலாம், ஒரு நாள் சாயம் வெளுத்து உண்மை ஜெயிக்கும். அப்போது அனைவரும் கேவலப்பட வேண்டியதிருக்கும். தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சாமி.

SCROLL FOR NEXT