'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சு சர்ச்சையாகி இருப்பதைத் தொடர்ந்து, விவேக் தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடித்துள்ளார் விவேக். இசை வெளியீட்டு விழாவில் விவேக் கலந்துகொண்டு பேசும் போது, "சிவாஜி நடிப்பில் 'இரும்புத்திரை’ என்ற படம் வெளியானது. அதில் ஒரு பாடல் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று ஆரம்பிக்கும். ஆனால் அந்தக் காலத்தில் இப்பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த வசனம் தற்போது நடிகர் விஜய்யால் பிரபலமாகியுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற கிண்டல்களை நிறுத்தாவிட்டால் ரசிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று சிவாஜி சமூகநலப் பேரவை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தன் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, விவேக் தனது ட்விட்டர் பதிவில் "1960-ல் 'இரும்புத்திரை' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி “நெஞ்சில் குடியிருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதைச் சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க" என்று விளக்கம் அளித்துள்ளார்.