விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பராவார். இதனால் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் முடிவடைந்துவிட்டன.
தற்போது 'ஜெர்ஸி' தமிழ் ரீமேக் மற்றும் 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனைத் தொடர்ந்து இயக்குநர் செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நாயகன் - நாயகி கூட்டணி இணைந்து பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
'மான்ஸ்டர்' வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'மாஃபியா' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷ்ணு விஷால் படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.