கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தமிழ்ப்படத்தின் ஷூட்டிங், கொடைக்கானலில் இன்று (செப்டம்பர் 12) தொடங்கியது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப்படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். கடந்த வருடம் (2018) நவம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸானது. அரசியல் ஆக்ஷன் படமான இது, விஜய் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், தமிழில் மட்டும் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. ‘மைதான்’ இந்திப் படத்தில் நடித்துவரும் அவர், முதல் பாலிவுட் படம் என்பதால் அதில் கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் (ஆகஸ்ட்) கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தமிழ்ப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கிறது.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் க்ரிஷ் எடிட் செய்கிறார். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் இன்று தொடங்கியது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.