ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் உருவாகும் படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கோமாளி' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் தனது 25-வது படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெயம் ரவி. இதனிடையே அஹ்மத் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தின் பொருட்செலவு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
'கோமாளி' படத்தின் வசூலைக் கணக்கில் கொண்டு, அஹ்மத் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டது படக்குழு. முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்படும் இதில் ஜெயம் ரவிக்கு நாயகியாக டாப்ஸி நடித்து வருகிறார்.
ரகுமான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவுள்ளார் யுவன் என்பது குறிப்பிடத்தக்கது,
'ஜன கண மன' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வருகிறது, இதில் ஹாலிவுட் படங்களின் சண்டை இயக்குநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படம் தொடர்பாக எவ்வித தகவலையுமே உறுதிப்படுத்தாமல் வைத்துள்ளது படக்குழு. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், அதிகாரபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.