தமிழ் சினிமா

நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் ஆதித்யா வர்மா

செய்திப்பிரிவு

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் 'ஆதித்யா வர்மா' திரைப்படம் நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி ரீமேக் தொடங்கப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் உருவான இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகிறார். 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் துருவ் விக்ரம் பாடிய ஒரு பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளராக ரதன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் 'ஆதித்யா வர்மா' நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை முடிந்து 2 வாரங்கள் கழித்து தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்துள்ளது படக்குழு.

முன்னதாக, 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் தொடங்கிப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. ஆனால், தயாரிப்பாளர்களுக்கு அந்தப் படம் திருப்தி அளிக்காததால், அந்தப் படம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT