பாடினது, ஆடினது போதும் என்று என் மனம் சொல்லியது. அதனால் தான் கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் என பாடகர் கானா பாலா தெரிவித்தார்.
புதுமுக இயக்குனர் சத்ய சரவணா இயக்கத்தில் திரு, சசி, சிங்கம் புலி, ராஜ்கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'மஞ்சள்'. டான் கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கணேஷ், எல்.சுரேஷ், ஒய்.பிரியா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாடலாசிரியர் மற்றும் பாடகர் கானா பாலா பேசியது, "நான் இதுவரைக்கும் 75 படங்களில் நடித்திருக்கிறேன். 300-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறேன். இதில் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருக்கிறேன்.
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனது கிடையாது. எனக்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். கொஞ்சம், கொஞ்சமாக மேலே வந்திருக்கிறேன். யாரிடமும் எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதில்லை.
பெண்களை மட்டம் தட்டியோ, காதலர்களை வாழ வைக்கிற மாதிரியோ நான் பாடல் பாடியதில்லை. காதல் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு பக்கம் போய் உன் பொழப்பையும் பார் என்பது மாதிரியான பாடல்களைத் தான் பாடி இருக்கிறேன்.
பாடினது, ஆடினது போதும் என்று என் மனம் சொல்லியது. அதனால் தான் கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். நான் ஒதுங்குவதால் கானா பாடல்கள் காணாமல் போய்விடாது. எனக்கு பின்னாடி நிறைய கானா பாடகர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நானே விலகிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
நானே சில பாடகர்களை, இசையமைப்பாளர்களிடம் கூட்டிக் கொண்டு போய் இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருக்கிறேன். அவர்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி மேலே வந்தால் எனக்கு சந்தோஷம் தான்.
நான் விலகப் போகிறேன் என்று சொன்னதால் முற்றிலும் ஒதுங்கப் போகிறேன் என்று சொல்லுவதாக அர்த்தம் கிடையாது. நான் மட்டுமே பாடணும், நடிக்கணும் என்று என்னைத் தேடிவரும் வாய்ப்புகளை மட்டும் விட மாட்டேன்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி சார் நடிக்கவிருக்கும் படத்தில் பாடுவது குறித்து நான் எதுவும் கேட்டதில்லை, அவரும் எதுவும் சொன்னதில்லை. அதை கேட்டால் நாகரிகமாக இருக்காது. அந்த வாய்ப்பு வந்தால் நிச்சயம் விட மாட்டேன்." என்று தெரிவித்தார்