2020-ம் ஆண்டு தன் நடிப்பில் இரண்டு படங்களை வெளிக்கொண்டு வர ரஜினி திட்டமிட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி, நயன்தாரா ஜெய்பூருக்குச் சென்றுள்ளனர்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பது உறுதியாகியுள்ளது. 'தர்பார்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒருமாத காலம் இமயமலைக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினி.
இதனிடையே, தன் அடுத்த படத்தின் பணிகளையும் ரஜினி தொடங்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிவா இயக்குவது உறுதியாகியுள்ளது. ஆனால், சூர்யா படத்தை முடித்துக் கொடுத்தவுடன், ரஜினி படத்துக்கான ஒப்பந்தத்தில் சிவா கையெழுத்திடுவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இந்தப் படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என்றும், அதற்குத் தகுந்தாற் போல் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதனிடையே சூர்யா படத்துக்கான கதையை முழுமையாக முடித்துவிட்ட இயக்குநர் சிவா, ரஜினி படத்துக்கான கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.