'கோமாளி' வெற்றிக் கொண்டாட்டத்தில் ஜெயம் ரவியுடன் இயக்குநர்கள் 
தமிழ் சினிமா

'கோமாளி' படத்துக்கு வரவேற்பு: மகிழ்ச்சியில் படக்குழு

செய்திப்பிரிவு

சுதந்திர தின விடுமுறைக்கு வெளியான 'கோமாளி' திரைப்படம், தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, ஷாரா, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை சக்திவேலன் வெளியிட்டார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.

கதை சர்ச்சை, திருச்சி வெளியீட்டில் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளைக் கடந்தே இந்தப் படம் திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாகக் கொஞ்சம் கலவையாக இருந்தாலும், மக்கள் மத்தியில் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில், 'கோமாளி' படத்தின் வசூல் ரூ.18 கோடியைத் தாண்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்களில் இது தான் அதிகம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இந்த வெற்றியை நேற்று (ஆகஸ்ட் 18) படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. தமிழகத்தில் ஏ சென்டர்கள் தவிர்த்து பி மற்றும் சி சென்டர்களில் 'கோமாளி' படம், 'நேர்கொண்ட பார்வை' படத்தை விட நல்ல வசூல் செய்து வருகிறது.

முக்கியமான திரையரங்குகள் அனைத்திலுமே 'நேர்கொண்ட பார்வை' படத்தை சிறு திரையரங்கிற்கு மாற்றிவிட்டு, 'கோமாளி' படத்தைத் திரையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் 'கோமாளி' படத்தின் இயக்குநர் ப்ரதீப் இயக்கும் 2-வது படத்தையும், வேல்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

SCROLL FOR NEXT