அட்லீ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தாணு தயாரித்து வருகிறார்.
எப்போதுமே ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் போது, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்குவது விஜய்யின் வழக்கம்.
'புலி' படப்பிடிப்பு நடைபெறும் போது, அட்லீ படத்தின் பணிகள் மறுபுறம் நடைபெற்று வந்தது. அதை போலவே, தற்போது தனது அடுத்த படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா என்று முடிவு செய்து வைத்திருக்கிறாராம் விஜய்.
'தலைவா' படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். விஜய்யிடம் சொன்ன ஒரு வரிக்கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
தனது 60-வது படமாக தயாராக இருப்பதால், புதுமையான கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து எஸ்.ஜே.சூர்யாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் விஜய் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.