வி.ராம்ஜி
குடும்பத்துடன் சென்று ரஜினிகாந்த், நேற்று 13ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலின் குளத்திலிருந்து எடுத்து வந்து, பூஜைகள் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்காக 48 நாட்கள் வைத்திருப்பது வழக்கம்.
கடந்த ஜூலை 1ம் தேதி அன்று அத்திவரதரின் தரிசனம் தொடங்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்கள். சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை காத்திருந்து, தரிசனம் செய்தார்கள் பக்தர்கள்.
இதையொட்டி, காஞ்சிபுரம் முழுவதுமே திருவிழாக் களையுடன் காட்சி அளிக்கிறது. பாதுக்காப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12ம் தேதி நிலவரப்படி, இதுவரை 81 லட்சம் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்து சென்றதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதனிடையே அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் என பல பிரபலங்களும் அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் நேற்றிரவு அத்திவரதரை தரிசனம் செய்தார்.
இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆலயத்தின் வெளியேயும் உள்ளேயும் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்பட்டன. ரஜினி, அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் அத்திவரதரை தரிசித்தார்கள்.
அவர் தரிசித்த சில நிமிடங்களிலேயே, அவர் ஆலயத்துக்குள் நடந்து வருவது, அவரையும் அவர் மனைவியையும் வரவேற்பது, கோயிலில் அமர்ந்திருப்பது, அத்திவரதரை தரிசிப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவின.