மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'கண்ணை நம்பாதே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
'கண்ணே கலைமானே' படத்துக்குப் பிறகு, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' இயக்குநர் மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதி ஆத்மிகா, பூமிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வந்தார்கள்.
'சைக்கோ' படத்தின் பணிகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது மீண்டும் 'கண்ணை நம்பாதே' படத்தின் பணிகளை சென்னையில் தொடங்கியுள்ளார்.
இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தைப் போலவே, இந்தப் படத்தையும் த்ரில்லர் பாணியிலேயே உருவாக்கியுள்ளார் மாறன்.
இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அதனை முடித்துக் கொண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. இதை தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.