'மாரி' படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பாலாஜி மோகன். இதே பெயரில் இயக்கிய குறும்படத்துக்கு வரவேற்பு கிடைத்ததால், அதே பெயரில் அக்கதையை படமாக இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து 'வாயை மூடிப் பேசவும்', 'மாரி', 'மாரி 2' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன். மேலும், 'As i'm Suffering from Kadhal' என்ற வெப் சிரீஸும் இயக்கியுள்ளார். தற்போது புதிதாக 'ஓபன் விண்டோ' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் பாலாஜி மோகன்.
தன் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ வடிவமைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாலாஜி மோகன். மேலும், தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அவர் கூறுகையில், “புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். 'ஓபன் விண்டோ' என்ற எனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்குகிறேன். நாளை (ஜூலை 22) பெருமைக்குரிய கூட்டுத் தயாரிப்பாக இருக்கப்போகும் எங்களது முதல் திரைப்படம் பற்றி அறிவிக்கவுள்ளேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும ஆசிர்வாதங்களுடன்.
’ஓபன் விண்டோ’ எனது குறும்படங்களுடன் ஆரம்பித்தது. பின் 'As Im Suffering From Kadhal' வெப் சீரிஸை தயாரித்தேன். புதுத் திறமைகள், நல்ல கரு, ஆரோக்கியமான பொழுதுபோக்கு, வித்தியாசமான சினிமா முயற்சிகளை ஆதரிக்க விழைகிறோம். திரைப்படங்கள், வெப் சீரிஸ், இன்னும் நிறைய. சின்னதாகக் தொடங்கியுள்ளோம், ஆனால் பெரிய கனவு உள்ளது" என்று தெரிவித்துள்ளார் பாலாஜி மோகன்.