சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'உறுமீன்'. அச்சு இசையமைத்திருக்கும் இப்படத்தை தில்லி பாபு தயாரித்திருக்கிறார். இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில், 'உறுமீன்' படப்பிடிப்பின் போது பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், இன்னும் சில வாரங்களில் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும், இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மியின் பெற்றோரை பாபி சிம்ஹாவின் நண்பரான கார்த்திக் சுப்புராஜும் அவரது தந்தையும் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு பாபி சிம்ஹா இச்செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாபி சிம்ஹாவின் நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்த போது, "'உறுமீன்' படப்பிடிப்பு சமயத்தில் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்தது உண்மை தான். இதற்கு இருவீட்டார் தரப்பிலும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம், ஜனவரியில் திருமணம் செய்த முடிவெடுத்து இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்கள்.
'உறுமீன்' படத்தைத் தொடர்ந்து 'பாம்பு சட்டை', 'கோ 2', 'இறைவி', 'மசாலா படம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா.