தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு இயங்கி வருவதாகவும், அதில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
'காஞ்சனா 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு தனது படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான கதை விவாதம் நடைபெற்று வருகிறது.
ட்விட்டர் தளத்தில் ராகவா லாரன்ஸ் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு, அவரது தரப்பில் இருந்து செய்திகள் வெளியிடுவது போல செய்திகளைத் தெரிவித்து வந்தார்கள். நஸ்ரியா தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று லாரன்ஸ் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமன்றி அவ்வப்போது நஸ்ரியா ட்விட்டர் செய்திகளை ரி-ட்வீட் செய்வது போன்ற செயல்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு குறித்து ராகவா லாரன்ஸ், "அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சமூக வலைத்தளத்தில் செய்தி பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப்பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
நான் பேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.