இயக்குநர் ராம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
'பிசாசு' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில், தனது இணை இயக்குநர் இயக்கவிருக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் மிஷ்கின். மிஷ்கின் எழுதிய கதையை இயக்க இருக்கிறார் அவருடைய இணை இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா.
படத்தின் நாயகனாக இயக்குநர் ராம், நாயகியாக ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். கதை, தயாரிப்பு என்ற பணிகளைத் தாண்டி இப்படத்தின் வில்லனாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகில் படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்த ப்ரியாமணி, இப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகுக்கு திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.