தமிழ் சினிமா

உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டேன்: ட்விட்டரில் சிம்பு உருக்கம்

ஸ்கிரீனன்

தனது ரசிகர்கள் பெருமையடையும் வகையில் 2015-ம் ஆண்டு இருக்கும் என்று தனது பிறந்தநாளையொட்டிய ட்விட்டர் குறிப்பில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

'போடா போடி' படத்தைத் தொடர்ந்து 'வாலு', 'வேட்டை மன்னன்' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய படங்களில் நடித்து வந்தாலும் எந்தொரு படமும் வெளியாகவில்லை. பிப்ரவரி 3-ம் தேதி வெளியாவதாக இருந்த 'வாலு'வும் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி 3-ம் தேதி தனது பிறந்த நாளை தனது நண்பர்களுக்கு விருந்து அளித்து கொண்டாடினார் சிம்பு. இவ்விருந்தில் நயன்தாரா, தனுஷ், அனிருத், ஜீவா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

"வாழ்த்துகளை தெரிவித்த எனது அன்பார்ந்த ரசிகர்களுக்கு நன்றி. உங்களது ட்வீட்டுகளை நான் படித்தேன். படத்தை வெளியிடாமல் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். இந்த வருடம் நீங்கள் பெருமிதம் அடையும் வகையில் இருக்கும்.

எனக்கு ஆதரவு அளித்துவரும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி. கடந்த 2 வருடங்களாக எனது படம் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் நீங்கள் என்னை மறக்கவில்லை. மிக்க நன்றி.

கடினமான நேரங்களில் எனக்கு பக்கபலமாக இருந்த நண்பர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி. எனது உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். உங்கள் அளப்பரிய அன்புக்கு நன்றி.

சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. எனது வெற்றி அனைத்துக்கும் ஒரே ஒருவர்தான் காரணம். நான் 9 மாதக் குழந்தையாக இருந்த போது என் மீது நம்பிக்கை வைத்தவர் அவர். எனது ஆசான், எனது தந்தை டி.ஆர்" என்று தனது பிறந்த நாளன்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

SCROLL FOR NEXT