அபிராமி திரையரங்கில் இணைய டிக்கெட் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் சினிமா டிக்கெட் இணையம் வழியாக புக்கிங் செய்யப்பட்டால், 30 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது ஜிஎஸ்டி வரியும் டிக்கெட் கட்டணத்தோடு இணைக்கப்பட்டு இருப்பதால் 120 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனை இணையம் வழியாக புக்கிங் செய்தால் 153 ரூபாயோடு 30 ரூபாய் சேர்த்து 183 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் ஒன்றான அபிராமி திரையரங்கில், இணைய டிக்கெட் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே முதன் முறையாகும் .இதற்கு தயாரிப்பாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருக்கும் அபிராமி ராமநாதனின் திரையரங்கம் தான் அபிராமி என்பது குறிப்பிடத்தக்கது.
அபிராமி ராமநாதனின் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது நமது சினிமாத்துறை சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் மிகப்பெரிய ஒன்றான சினிமா டிக்கெட் இணையதள பதிவு முறையை தங்களது சென்னை அபிராமி திரையரங்குகளில் ரத்து செய்தது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் பொதுமக்களும் பயன்பெறுவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ளது அனைத்து திரையரங்குகளுக்கும் முன் உதாரணமாக செயல்பட்டதற்கு எங்களது தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும், தமிழ் திரையுலகினரின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.