தமிழ் சினிமா

தமிழகத்தில் பாகுபலி 2 இமாலய சாதனை: தமிழ்ப் படங்கள் இதனை முறியடிப்பது சாத்தியமா?

ஸ்கிரீனன்

தமிழகத்தில் 'பாகுபலி 2' வியாபாரத்தில் இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை மற்ற படங்கள் முறியடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், தற்போது வெளியாகும் சில புதிய படங்களூக்கு நிகராக கூட்டமிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.

தமிழக விநியோகத்தில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வியாபார சாதனைகளையும் முறியடித்ததுள்ளது. இனிமேல் வெளியாகவுள்ள படங்கள், 'பாகுபலி 2' செய்துள்ள சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள்.

இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் நாகநாதன் கூறியதாவது:

''தமிழகத்தில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை செய்துள்ளது. டிக்கெட் விற்பனையில் அதிகம் பேர் பார்த்த படமும் இதுதான். 2000-ம் ஆண்டிற்குப் பிறகு அதிகமான திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து ஓடிய படம் 'பாகுபலி 2' மட்டுமே.

தமிழ் திரையுலகின் முன்னணி 5 நடிகர்களின் படங்கள், விநியோகத்தில் பங்குத்தொகையாக 35 - 40 கோடி வரை கிடைக்கும். ஆனால், 'பாகுபலி 2' இதனை இரட்டிப்பாக்கி பங்குத்தொகை மட்டுமே சுமார் 80 கோடி வரை செய்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை விட 2 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது எனச் சொல்லலாம்.

தமிழ் நடிகர்கள் படங்கள் முதலில் என்ன விற்பனையாகிறதோ அதோடு தயாரிப்பாளருக்கு பணம் கிடைப்பது நின்றுவிடும். ஆனால், 47 கோடிக்கு 'பாகுபலி 2' விற்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் விநியோகஸ்தர் தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்தார். தமிழ் திரையுலகில் இப்படி ஒரு விஷயம் எனக்கு தெரிந்து எந்தவொரு படத்துக்கும் நடைபெற்றதே இல்லை'' என்று நாகநாதன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 'பாகுபலி 2' நிகழ்த்தியுள்ள மாபெரும் சாதனையை, தமிழ்ப் படங்கள் முறியடிக்க முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை 'பாகுபலி 2' நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT