நவீன சமூகம் தான் ஒரு பெண்ணின் கன்னித்தன்மை பற்றி கவலைப்படுகிறது என்றும், நவீன காலத்து ஆண்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை என்றும் நடிகை பியா பாஜ்பாய் கூறியுள்ளார்.
கோவா, கோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். இந்தியில் இவர் நடித்துள்ள 'மிர்ஸா ஜூலியட்' என்ற படம் ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
"ஒரு பெண்ணின் கன்னித்தன்மையைப் பற்றி நவீன காலத்து ஆண்கள் கவலைப்படுவதே இல்லை. சமூகம் தான் கவலை கொள்கிறது. அதனால் தான் சிறு நகரங்களிலும் கன்னித்தன்மையை மீண்டும் பெற அறுவை சிகிச்சையெல்லாம் நடக்கிறது. நான் நடித்த குறும்படம் ஒன்றும் இது குறித்து பேசியுள்ளது.
கண்டிப்பா சில ஆண்கள் திருமணம் செய்து கொள்ள கன்னிப் பெண்கள் தான் வேண்டும் என தேடுகின்றனர். ஆனால் பெரும்பாலும் அது அவர்களின் குடும்பத்தினரால். அதாவது முந்தைய தலைமுறையினரால் வலியுறுத்தப்படுவதே.
இன்றைய காலத்தில் திருமணத்துக்கு முன்னால் ஒரு உறவில் இருப்பது சகஜம். அப்போது உடல்ரீதியான நெருக்கமும் ஏற்படுகிறது. பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது? முதல் சந்திப்பில் அந்தப் பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால் அது அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது சொல்கிறதா? ஒரு பெண்ணாக எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. சமூகம் அதை பின்பற்றுக்கிறது என எனக்குத் தெரியும். ஆனால் இப்படிப்பட்ட பழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.