தமிழ் சினிமா

பாடகரான சந்தானம்!

செய்திப்பிரிவு

'நம்பியார்' படத்திற்காக ஒரு முழுப்பாடலை பாடியிருக்கிறார் சந்தானம்.

இதுவரை காமெடியில் மட்டுமே கலக்கிவந்த சந்தானத்தை முதன் முறையாக ஒரு முழுப்பாடலையும் ‘நம்பியார்’ படத்திற்காக பாடவைத்திருக்கிறார்கள். இப்பாடலை விவேகா எழுத, விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

இதுகுறித்து ‘நம்பியார்’ இயக்குநர் கணேஷ் “இப்படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். காமெடிக்கு பஞ்சமில்லாத கதைக்களம் .. அதற்காக வெறும் காமெடிய மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல. சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, விஜய் ஆண்டனி சார் சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார். சந்தானம் மறுத்துவிடுவார் என்று தான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்துவிட்டார். ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொடுத்துவிட்டார். “ என்றார்.

அப்பாடல் 'ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி' என்று ஆரம்பிக்கிறது. படத்தின் நாயகன், அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பெனி கொடுக்கும் ஸ்ரீகாந்த் முதல்முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.

இக்காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு பொருத்தமாக வந்திருக்கு என்கிறார் இயக்குநர் கணேஷ்.

இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ஸ்ரீகாந்த் “சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். சந்தானத்துக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். “ என்றார்.

SCROLL FOR NEXT