தமிழ் சினிமா

இசைக்கு எல்லைகள் கிடையாது: இளையராஜா

பிடிஐ

பாகிஸ்தான் கலைஞர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அண்மையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது என்று இளையராஜா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நடிகர்கள் தங்களின் நடிப்புத் தொழிலை நிறுத்திக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் எனவும், முதலில் அவர்கள் இந்தியாவை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேறியாக வேண்டும் என்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கூறியிருந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த இளையராஜா, ''இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது'' என்று கூறியுள்ளார்.

அதே நேரம், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கேள்விக்கு பதில் கூற அவர் மறுத்துவிட்டார்.

''(ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி) என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கே அவரைப் பற்றித் தெரியும். ஆனால் நானும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இளையராஜா, நியூஜெர்சியில் சில நாட்களுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான இந்திய அமெரிக்கர்களிடயே நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் சாதனையை நினைவுகூரும் நோக்கில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில்தான் இளையராஜா இசைக்கு எல்லைகள் கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT