விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' திரைப்படம் முழுக்க டிஜிட்டல் குற்றங்களைப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றும் புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'இரும்புத்திரை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படம் டிஜிட்டல் குற்றங்களான ஏ.டி.எம் மெஷின் கொள்ளை மற்றும் மோசடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் மித்ரன். இக்கதையைக் கேட்ட அடுத்த நொடியே, கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஷால்.
சமந்தா நாயகியாக நடித்துவரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் வில்லனாக முதலில் ஆர்யா நடிக்கவிருந்தார். தற்போது ஆர்யாவுக்கு பதிலாக அர்ஜூன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.