தரணிதரன் இயக்கத்தில் சத்யராஜ், சிபிராஜ் நடித்திருக்கும் 'ஜாக்சன் துரை' ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
'பர்மா' படத்தில் வித்தியாசமான கதைக்களம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் தரணிதரன். அப்படத்தைத் தொடர்ந்து 'ஜாக்சன் துரை' என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி இருக்கிறார்.
சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்தை சரவணன் தயாரிக்கிறார். இப்படத்தை சரியாக திட்டமிட்டு 'ஜாக்சன் துரை' படத்தையும் 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.
'ஜாக்சன் துரை' படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து தணிக்கை குழுவுக்கு திரையிட்டார்கள். இப்படத்துக்கு 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், ஜூலை 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.