'சந்திரமுகி' படத்தினைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் நடிக்கும் 'ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்' என்ற படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பி.வாசு.
ரஜினிகாந்த் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்தார்.
உணர்வுபூர்வமான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுக்கும் இயக்குநர் பி.வாசு தனது அடுத்த படத்தினை பிரமிக்க வைக்கும் வகையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஐஸ்வர்யாராய் பச்சன் இதுவரை நடித்திராத சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்திற்கான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் இப்படத்திற்காக பணியாற்ற இருக்கிறார்கள்
இந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். வட இந்தியாவில் உள்ள பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள அரங்குகளிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது.
படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்.ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிரியாமணி நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘சாருலதா’ படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் சார்பாக கே.ரமேஷ் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.