விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி இருக்கிறது.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கினார்கள்.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்கும் டோட்டா ராய் செளத்ரி சிறையில் இருந்து தப்பித்து செல்வது போன்றும், அவரை பிடிக்க விஜய் நடத்தும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவித்து இருக்கிறது படக்குழு.
முதலில் ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்டார்கள். ஆனால், தெலங்கானா பிரச்சினை நடைபெற்று வருவதால், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஜெயில் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஐங்கரன் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.