தமிழக மக்களை இனிமேல் ஏமாற்ற முடியாது என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய போது ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மெரினா கடற்கரையில் பெரும் திரளான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, "இதைவிட அமைதியாக போராட்டம் செய்ய முடியாது. யாரையும் அடிக்கவில்லை, பேருந்தை உடைக்கவில்லை. யாரும் குடித்துவிட்டு கலாட்டா பண்ணவில்லை. இங்கிருக்கும் இளைஞர்கள் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
நான் ஏன் இங்கு வந்தேன் என்றால், ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம். 4 - 5 நாளாக நடைபெற்று வரும் போராட்டம் நமது ஒற்றுமையின் அடையாளம். இந்த ஒற்றுமை இன்று ஜல்லிக்கட்டு நடத்திவிட்டு நாளை போய்விடுவது கிடையாது.
விவசாயிகள் தற்கொலைக்கும் இதே கூட்டம் தான் போராடப் போகிறது. கல்லூரியில் அதிகமாக கட்டணம் வசூலித்தால் இதே கூட்டம் தான் போராடும். எங்களை யாரும் இனிமேல் ஏமாற்ற முடியாது. அவ்வாறு செய்தால் கேள்வி கேட்க நாங்கள் சாலைக்கு வருவோம்.
தமிழக மக்களை இனிமேல் ஏமாற்ற முடியாது. அடுத்தவர்களுக்கு உதவ சாலைக்கு வந்து உதவவும் முடியும், எங்களுடைய உரிமைக்கு போராடவும் முடியும். அதன் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம். அதற்கு ஆதரவு தெரிவிக்கதான் வந்தேன்" என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.