தமிழ் சினிமா

வரி ஏய்ப்பு செய்திராத நான் ரூ.60 கோடி இழந்தேன்: கமல் சாடல்

ஸ்கிரீனன்

எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் ரூ.60 கோடி இழந்தேன் என்று 'விஸ்வரூபம்' சர்ச்சைக் குறித்து கமல் தெரிவித்துள்ளார்.

கமல் இயக்கித் தயாரித்து 2013-ம் ஆண்டில் வெளியான படம் 'விஸ்வரூபம்'. முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறியதால், பலரும் 'விஸ்வரூபம்' வெளியீட்டிற்குத் தடை கோரினர். பலமுறை பேச்சுவார்த்தைக்குப் பிறகே படம் வெளியானது.

இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்துக்கு நிலவிய சிக்கல் தொடர்பாகக் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது, "எனது ’விஸ்வரூபம்’ படத்திற்குத் தடை விதிக்கப்பட்டபோது சட்டப் போராட்டத்தின் வாயிலாகத் தடையை நீக்கப்பெற்றோம்.

ஆனாலும், அப்போது ஆட்சியிலிருந்த அரசு படத்தை மீண்டும் தடை செய்தது. மக்கள் ஆதரவு பெருகிய பின்னரே படத்தின் மீதான தடையை அவர்கள் நீக்கினர். எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவர்கள் திட்டமும் அதுவே.

எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். நான் பணிவானவன் என்றே அறியப்பட விரும்பினேன். ஆனால், அவமானத்துக்குள்ளானேன். கிட்டத்தட்ட நொறுக்கப்பட்டேன். அம்னீஸியா என்ற மறதி நோய் நமது தேசத்தில் புரையோடிக் கிடக்கிறது.

ஊழலில் திளைத்திருக்கும் ஒரு தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதாக மறக்கப்படும். எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் ரூ.60 கோடி இழந்தேன். மக்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களே என்னை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.

'விஸ்வரூபம் 2'ம் பாகத்துக்குச் சிக்கல்கள் வராது என நான் நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா?" என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

SCROLL FOR NEXT