தமிழ் சினிமா

திருட்டுப்பயலே 2-ல் நாயகனாக பாபி சிம்ஹா; வில்லனாக பிரசன்னா

ஸ்கிரீனன்

'திருட்டுப்பயலே 2' படத்தின் நாயகனாக பாபி சிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

2006ம் ஆண்டு ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுசி கணேஷ் இயக்கத்தில் வெளியான படம் 'திருட்டு பயலே'. ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அப்படத்தின் 2ம் பாகம் அதே நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அக்கதையின் தொடர்ச்சியாக இல்லாமல், தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றுவாறு வேறு ஒரு கதையை தயார் செய்திருக்கிறார் சுசிகணேசன்.

நாயகனாக பாபி சிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். நாயகியாக மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து சுசி கணேசன், "பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக் காணோம். சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய உந்து சக்தி.

பாகம் 2, 3.... என்பது பொதுவாக கதாநாயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும், சில நேரங்களில் கதை கருவையும் மையப்படுத்தும். கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும் பின்புலம் இன்றும் என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால், இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது" என்று தெரிவித்துள்ளார்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தை படமாக்க ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT