தமிழ் சினிமா

வரிவிலக்குக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது: இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

ஸ்கிரீனன்

வரிவிலக்குக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது என்று FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

ஓடம்.இளவரசு இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன் 24) நடைபெற்றது. இவ்விழாவில் அதர்வா, சூரி, ரெஜினா, அதிதி போஹன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் FEFSI தலைவர் மற்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது, "’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற மிகச் சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது. அதை 'GGSR' என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும். வரிவிலக்குக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும். தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சிவா இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது.

எனக்கு முதல் படம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மா கிரியேஷன் சிவா தான்.அவர் தான் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார். அந்த படத்தை இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி மீண்டும். எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கித் தந்தவர் சிவா. அவருக்கு நான் எப்போதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்" என்று பேசினார் ஆர்.கே.செல்வமணி.

'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT