ரஜினி அரசியலில் நுழைவாரா மாட்டாரா என்ற வாதவிவாதங்கள் வலுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்று கூறியிருக்கிறார் அவரது நண்பர் ராஜ் பகதூர்.
1970-களில் ரஜினிகாந்த் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியபோது உடன் பணிபுரிந்தவர் ராஜ்பகதூர்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, "கடந்த 8-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியை சந்தித்தேன். முன் எப்போதுமே இல்லாத அளவுக்கு அவர் மிகுந்த பதற்றத்தில் இருந்தார். அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னிடம் ஆலோசித்தார். அதிமுக தலைவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே ரஜினி தமிழக மக்கள் எதிர்காலம் குறித்து அடிக்கடி பேசுவார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். என்னைப்போல் நிறைய பேர் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்" என ராஜ் பகதூர் கூறியிருக்கிறார்.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் அறிவித்த ஒரு சில நாட்களில் அவரது நண்பர் ராஜ்பகதூர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.