'கொடி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் படமொன்று நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கொடி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக அளித்த பேட்டியில் "மீண்டும் தனுஷை இயக்கவுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், எப்போது என்ற விவரங்களை வெளியிடாமல் இருந்தார்கள்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், "'கொடி' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் துரை.செந்தில்குமார் எனக்காக கதை எழுதி வருகிறார். இதர விவரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். நன்றி" என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.