தமிழ் சினிமா

கேரளாவில் கத்தி கொண்டாட்டத்தில் ரசிகர் மரணம்: நடிகர் விஜய் இரங்கல்

செய்திப்பிரிவு

கேரளாவில் 'கத்தி' முதல் நாள் காட்சியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததற்கு, நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி அன்று தமிழ்நாட்டு, கர்நாடாக, கேரளா ஆகிய மாநிலங்களில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் பலரும் விஜய்க்கு கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர்.

இதில் கேரளாவில் உள்ள வடக்கன்சேரி என்ற இடத்தில் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும்போது உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்தார். தீபாவளி அன்று மதியம் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது.

ரசிகர் உன்னிகிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் விஜய், "வடக்கன்சேரியில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணனின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ப்ரியமானவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

தங்களது உயிர்க்கும், மற்றவர்களது உயிர்க்கும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் பண்டிகை காலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உங்களது ஆதரவை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

தயவு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். இல்லையேல் இதுபோன்ற அசம்பாவிதங்களையும், தாங்க முடியாத வலிகளையும் சந்திக்க நேரிடும். உங்களை நீங்கள் மதிப்பதே, என்னை நீங்கள் மதிப்பதற்கான அடையாளம்" என்று விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT