தமிழ் சினிமா

அஜித்தின் வளர்ச்சியை வைத்து என் வளர்ச்சியைத் திட்டமிடுகிறேனா?- சிம்பு காட்டம்

ஸ்கிரீனன்

"அஜித்தின் வளர்ச்சியை வைத்து எனது வளர்ச்சிக்கு திட்டமிடுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர்" என்று சிம்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, மஹத், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது "அஜித் சாரை பற்றி யாருமே பேசாத போது, அவருடைய தோல்வியடைந்த படத்தின் கட்-அவுட்டை வைத்து 'தல' என்று கத்தியவன் நான். தற்போது அவர் வளர்ந்துவிட்டார். அனைவருமே அவரது பெயரை உபயோகித்து வருகிறார்கள். இனிமேல் அஜித்தைப் பற்றி நான் பேச மாட்டேன். அஜித் சாரின் வளர்ச்சியால் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிலளித்தார். சிம்புவின் இந்த பதில், சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்ட போது, "துறையில் எனக்கு பிடித்தவர்களைப் பற்றி எப்போதுமே நான் வெளிப்படையாக இருந்திருக்கிறேன். இன்று, எனது கடின உழைப்பின் காரணமாக, எனக்கென ஒரு ரசிகர் கூட்டமும், துறையில் ஒரு நல்ல இடமும் கிடைத்துள்ளது. ஆனால் ஒரு சிலர், நான் அஜித்தின் புகழ்ச்சியை வைத்து எனது வளர்ச்சிக்கு திட்டமிடுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். அவர்கள் செயல் முட்டாள்தனமானது.

அஜித்தின் நட்சத்திர அந்தஸ்து எங்கோ சென்று விட்டது. வேறொரு தளத்தில் அது இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு யாருடைய ஆதரவும், பாராட்டும் இப்போது தேவையில்லை. அதைத்தான் நான் சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது குறித்து எனக்கு கவலையில்லை" என்று பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT