தனுஷ் படத்துக்கு முன்பாக, பிரபுதேவா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
'இறைவி' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் சுப்புராஜ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்பாக, புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதற்காக கதை எழுதி வந்தார். அக்கதையை பிரபுதேவாவிடம் கூறவே, அவரோ உடனடியாக தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நாயகியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
'யங் மங் சங்', 'குலேபகாவலி' ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபுதேவா. மேலும், தான் இயக்கவுள்ள 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தின் திரைக்கதை அமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.