’வேட்டை மன்னன்’ படம் டிராப்பாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு, ஹன்சிகா, தீக்ஷா சேத், ஜெய், வி.டி.வி. கணேஷ் நடிக்க, நெல்சன் இயக்கிய படம் ‘வேட்டை மன்னன்’. நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்ற போது, இடையே இதே நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடிக்க ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஒருவழியாக இப்போது தான் ’வாலு’ படம் இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கிறது.
’வேட்டை மன்னன்’ படத்தின் டீஸர் வெளியான போது, படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அப்படத்தின் 60% படப்பிடிப்பு, பிரேசில் நாட்டில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின.
’வாலு’ படப்பிடிப்பே இன்னும் இருப்பதால், ‘வேட்டை மன்னன்’ படத்தைத் தொடர வாய்ப்பில்லை என தெரிகிறது. அதுமட்டுமல்லாது, இயக்குநர் நெல்சன் மற்றொரு கதையை தயார் செய்துவிட்டாராம். விரைவில், ‘வேட்டை மன்னன்’ படத்திலிருந்து விலகிக் கொண்டு, புது படத்தினை இயக்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் தயாராகப் போகும் ZOMBIE வகை திரைப்படத்தை தான் நெல்சன் இயக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.