தமிழ் சினிமா

திருட்டு வி.சி.டி. விவகாரத்தில் ஜோக்கர் படக்குழு வித்தியாச முயற்சி

செய்திப்பிரிவு

திருட்டு வி.சி.டியில் 'ஜோக்கர்' படம் பார்ப்பவர்கள் அதற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சினிமா தொழிலைக் காப்பாற்ற திருட்டு வி.சி.டி- யை ஒழிக்க வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

திருட்டு வி.சி.டி-யை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள், முயற்சிகள் எடுத்துவந்தாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.

இந்நிலையில், இதை வேறு பார்வையில் அணுகும் விதமாக, ஜோக்கர் படக்குழு வித்தியாச முயற்சியை மேற்கொண்டுள்ளது.

திருட்டு வி.சி.டியில் 'ஜோக்கர்' படம் பார்ப்பவர்கள் அதற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக 'ஜோக்கர்' படக்குழு வெளியிட்ட போஸ்டரில், '' திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின் - சுரண்டலின் இன்னொரு அங்கம்தான். ஒரு சினிமா பல நூறு தொழிலாளர்களின் வியர்வை, சில ஆண்டு உழைப்பு. இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்கள் அதற்கான நியாயமான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்திடுங்கள.

நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்''என்று தெரிவித்துள்ளது.

இந்த வித்தியாச முயற்சியைக் குறிப்பிடும் போஸ்டரை சினிமா ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT