தமிழ் சினிமா

ஒரு டிக்கெட்டில் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் அறிவிப்பு : விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்

ஸ்கிரீனன்

ஒரு டிக்கெட்டிலிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் தரப்படும் என்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும் போது, "திரையரங்கில் ஒரு டிக்கெட்லிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் விதம் வழங்கப்படும். எந்த தேதியிலிருந்து என்பது விரைவில் அறிவிக்கப்படும்" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் P கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் விஷால் பேசியதைத் தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் என்று அறிவிப்பு செய்துள்ள விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. விஷால் நடிகர் சங்க பொறுப்பில் இருக்கிறார். இப்போது அவர் தயாரிப்பாளர் சங்க பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர், தான் சம்பந்தப்பட்ட சங்கம் சார்ந்து பேசினால் பிரச்சினை இல்லை.

ஆனால் எங்கள் சங்கம் தொடர்பாக அறிவிப்பு செய்ய அவர் யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?. அவர் ஒன்று செய்யலாம். விவசாயிகளுக்காக சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம்.

நடிகர் சங்கத்தைக் கூட்டி எல்லா நடிகர்களும் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து அதை விவசாயிகளுக்கு வழங்கலாம். தயாரிப்பாளர் சங்கத்தைக் கூட்டியும் இப்படி ஏதாவது வழங்கலாம்.

ஆனால் எங்களை இதில் சம்பந்தப்படுத்துவது ஏன்?. வருகிற படங்களில் 99% படங்கள் லாபமில்லை. இந்நிலையில் விஷால் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இது அவருக்கு இது பற்றித் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

அவருக்கு அனுபவம் இல்லை. அப்படி என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இப்படி எதுவும் புரியாமல் குழப்பம் செய்யக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக் கூடாது. இது பற்றி விஷாலோடு ஊடகங்களிலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார் கண்ணப்பன்.

SCROLL FOR NEXT