கிரேசி மோகனின் மறைவு, தமிழ் நகைச்சுவைக்கு இழப்பு என நடிகர், ஆர்.ஜே. பாலாஜி புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.
கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் ஆர்.ஜே.வுமான பாலாஜி, “அவரது படைப்புகளைப் பார்த்து, சிரித்து, வியந்து வளர்ந்தவன் நான். மொழியின் மீது அவருக்கிருந்த அற்புதமான ஆளுமையும், அவரது அட்டகாசமான வார்த்தை விளையாட்டும்... ஒரு விசேஷமான, தனித்துவமான நகைச்சுவை வகை, கிரேசி மோகன் ஜோக்ஸ்.
சார், நீங்கள் உண்மையான லெஜண்ட். தமிழ் நகைச்சுவைக்கு ஒரு இழப்பு. உங்கள் இழப்பை நாங்கள் கண்டிப்பாக உணர்வோம் சார்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.
‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.